திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தைச் சேர்ந்த 12 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முஸ்லிம் உரிமைப் பாதுகாப்பு கழகம் சார்பில் நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். லஞ்ச புகாரில் சிக்கிய ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரை ராமகிருஷ்ணா பாலம் அருகே புதன்கிழமை(ஜூலை 10) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாநகர காவல்துறை அனுமதி அளிக்கவில்லையாம். இந்நிலையில் அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 12 பேரை கைது செய்தனர்.