மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 17 லட்சம் மதிப்பு தங்க நகைகள் மற்றும் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புதன்கிழமை அதிகாலை வந்த மலிண்டோ விமான பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் என்ற பயணி, தனது தோள் பையின் (ஷோல்டர் பேக்) அடியில் ஒட்டியுள்ள பகுதியைப் பிரித்து சிறு அட்டையில் சிறு சிறு துண்டுகளாக வடிவமைக்கப்பட்ட 260 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை நிறம் மாற்றி, பேப்பரில் பதித்து மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதேபோல மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளை சோதித்தபோது, சரஸ்வதிவீரப்பன் என்ற பயணி தனது உடைமைகளுக்குள் 240 கிராம் எடையுள்ள 8 தங்க வளையல்களை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. ஆக மொத்தம் 500 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.