பறிமுதல் செய்யப்பட்ட சொந்த பேருந்தை திருடியவர் கைது

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு பேருந்தை திருடிய அதன் உரிமையாளரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு பேருந்தை திருடிய அதன் உரிமையாளரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் திருச்சி திண்டுக்கல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த சொகுசுப் பேருந்தை வழிமறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது சாலை வரி செலுத்தாமல் பேருந்தை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இயக்கியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்தப் பேருந்து தூத்துக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வர அபராதத்தைச் செலுத்திவிட்டு பேருந்தை எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்த பேருந்தை பிராட்டியூர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.  இந்நிலையில் கடந்த டிச. 31ஆம் தேதி இரவு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்தை யாரோ திருடி சென்றுவிட்டனர். புகாரின் பேரில் அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிந்தனர்.  சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்லிடபேசியை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிய தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் அந்தப் பேருந்து நிற்பதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது பேருந்தின் உரிமையாளர் சுயம்பு (45), அவரது அண்ணன் ராமலிங்கம் (48) ஆகியோர் சேர்ந்து பேருந்தைத் திருடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுயம்புவை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த ரூ. 9 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராமலிங்கத்தை தேடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com