இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது என்றார் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் வி. பாலகிருஷ்ணன்.
திருச்சி புனித வளனார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது: கல்லூரிக் காலங்களில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவை நிர்வாகிகள் ஜனநாயகத்தின் கொள்கைகளை மற்றவர்களுக்கு கொண்டு செல்வது மிக அவசியம். அதுமட்டுமின்றி மாணவர்களை ஒருங்கிணைத்து படைப்பாற்றல் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை முன்னெடுத்து சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். பிரச்னை வெவ்வேறு வழிகளில் வரக்கூடியது. அதை சமாளிக்ககூடிய திறமையை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்களுள் உருவாகும் புதிய எண்ணங்களை எழுதி வைத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தினால் எளிதில் வெற்றி கிடைக்கும். உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் இந்தியா உள்ளது. ஆனால் இன்றைக்கு அவர்கள் மது மற்றும் சமூக வலைதளத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்றனர். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.
கல்லூரி அதிபர் லியோனார்டு தலைமை வகித்தார். முதல்வர் ஆரோக்கியசாமி, துணை முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக நுண்கலை ஒருங்கிணைப்பாளர் விமல் ஜெரால்டு நன்றி கூறினார்.