முசிறியில் பைக் திருடிய இருவர் கைது
திருச்சி மாவட்டம், முசிறியில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற இருவரை முசிறி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
முசிறி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சோழன் மகன் கலையரசன் (31). இவர் தனது வீட்டின் முன்பு திங்கள்கிழமை இரவு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை காலை முதல் காணவில்லை என முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அய்யம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சதீஸ் குமார் (31), ரெங்கராஜ் மகன் குணாநிதி (21) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
தனியார் நிதி நிறுவன மேலாளர் பைக் திருட்டு: இதேபோல தொட்டியம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் தமிழரசன் (30). இவர், தொட்டியத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை தனது வீட்டு முன்பு கடந்த திங்கள்கிழமை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என தொட்டியம் போலீஸில் தமிழரசன் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.