மூலப்பொருள்கள் குறைவாக உள்ளதைக் கண்டித்து ஹெச்ஏபிபி தொழிலாளர்கள் புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொழிற்சாலையில், ராணுவத்துக்கு தயாரிக்கப்படும் தளவாட பொருள்களுக்கு தேவையான மூலப்பொருள்கள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனை கண்டித்து ஹெச் ஏபி பி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் ஜூன் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதன்படி அச்சங்ககத்தின் துணைத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இப்போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் சுழற்சி முறையில் பங்கேற்று உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளனர்.