திருச்சி மாவட்டம், முசிறி அருகே மணல் திருட்டைத் தடுக்க சென்ற விஏஓ-வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை முசிறி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
முசிறி அருகே வெள்ளூர் சத்திரம் காவிரியாற்றுப் பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் முசிறி கிழக்கு பகுதி விஏஓ தேவராஜ் (32) வருவாய்த் துறையினருடன் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினார்.
வெள்ளூர் சத்திரம் பகுதியில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் சாக்கு மூட்டைகளில் அனுமதியின்றி காவிரி ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டுநரான சோழம்பட்டி சுரேஷை (27) வேனை எடுத்து கொண்டு காவல் நிலையம் வருமாறு விஏஓ கூறியதற்கு வர மறுத்த அவர், தகாத வார்த்தைகளால் பேசி வருவாய்த் துறையினரை வேன் ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து விஏஓ தேவராஜ் முசிறி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுரேஷை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.