திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த புதுகை கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (30). கூலித்தொழிலாளியான இவர் புதன்கிழமை திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் நோக்கி திருச்சி-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அம்பேத்கார் நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கியெறியப்பட்ட செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மணிகண்டம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.