திருச்சி: அணு உலைகளால் ஆபத்துகளைவிட அவற்றால் ஏற்படும் பயன்பாடுகள்தான் அதிகம் என்றார் மும்பை அணுமின் நிலைய முதுநிலை மேலாளர் எஸ்.கே. ஜெனா.
திருச்சி அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியலாளருடனான சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
அணு உலைகளால் நமக்கு ஆபத்துகள் என்ற தகவல்கள் மட்டுமே அதிகளவில் பரவிவருகின்றன. ஆனால் அவற்றால் நமக்கு கிடைக்கும் பயன்கள் அதைவிட அதிகமாகும். மேலும் இந்தியாவிலுள்ள அணு உலைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து அணு உலையின் மாதிரி குறித்து செயல் விளக்கத்தையும் ஜெனா செய்து காண்பித்தார்.
கோளரங்கத் திட்ட இயக்குநர் ஆர். ஆகிலன் நிகழ்வில் பேசியது:
தமிழகத்தில் கல்பாக்கம் உள்ளிட்ட இரு இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மின் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்ட போது நமக்கு அணு உலைகளால் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம்தான் தக்க சமயத்தில் உதவியது.
தற்போதும் 4 யூனிட்டுகள் மூலம் சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகின்றது. எனவே அணு உலைகள் குறித்து அச்சப்படத் தேவையில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் நூலகங்களில் அணு உலைகள் மாதிரியை நிறுவி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.