திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போக்ஸா சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவராம்பட்டியில் வசிக்கும் இன்னாசி என்ற கூலித் தொழிலாளியின் 16 வயது மகள் உடல் நலக்குறைவால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்னாசியின் வீட்டின் அருகிலேயே வசிப்பவர் தோமஸ் மகன் வேளாங்கண்ணி(38), அரிசி வியாபாரி. மனைவி, மகன், மகளுடன் வசித்து வரும் வேளாங்கண்ணி, கடந்த 19-ஆம் தேதி இன்னாசியும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில், தனியாக வீட்டில் இருந்த 16 வயது சிறுமியிடம் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதை சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாதபோது திங்கள்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அந்தச் சிறுமி மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை த்தொடர்ந்து வேளாங்கண்ணி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து அவரைத் தேடுகின்றனர்.