திருச்சி மாவட்டம் முசிறி அருகே நேரிட்ட சாலை விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சூரங்காடு பகுதியைச் சேர்ந்த சத்தியகீதா (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இவர்களின் உறவினர்கள் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த தங்களது குழந்தைகளான அபிஷா (16), லத்திகா (16), அமோதினி (16) ஆகியோரை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விட திங்கள்கிழமை அதிகாலை பட்டுகோட்டை சேர்ந்த விஜய்அருள்ராஜ் (29) என்பவருக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர்.
முசிறி அருகிலுள்ள உமையாள்புரம் மாரியம்மன் கோயில் அருகே வந்தபோது ஓட்டுநர் விஜய்அருள்ராஜின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த சத்தியகீதா (40), அஞ்சுகம் (43) லதா (42) அபிஷா (16), லத்திகா (16), அமோதினி (16) பாலசுப்பிரமணியன் (46) மற்றும் கார் ஓட்டுனர் விஜய்அருள்ராஜ் (29) ஆகிய எட்டு பேரும் காயமடைந்தனர்.
தகவலறிந்த முசிறி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர். விபத்து தொடர்பாக அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.