அந்தநல்லூர் ஒன்றியம், குழுமணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்கு ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி குத்துவிளகேற்றினார்.
முன்னதாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்வதை அமைச்சர்கள் நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் பார்வையிட்டனர்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் க. சிவராசு, சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ், உதவி சித்த மருத்துவ அலுவலர் சபரிநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.