தேர்தல் விதிகள் தொடர்பாக துறையூர் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்திலிருந்து அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
துறையூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற அதிமுக நகரச் செயலர் ஜெயராமன் நகராட்சி ஆணையரைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் தொடர்பாக துறையூர் போலீஸார் 2 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகக் கூறினார்.
உடனே எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமார் நகராட்சி ஆணையரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும், கட்சினர் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அதுவரை தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனக் கூறி திமுகவினர், கூட்டணிக் கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார். அதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் சிறிது நேரத்துக்குப் பிறகு வெளியேறினர்.