ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் தேரோட் ட விழாவின் 4 ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் பங்குனித் தேரோட்ட விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
வெள்ளிக்கிழமை ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். சனிக்கிழமை காலை 7.30-க்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாச மண்டபத்திற்கு 9.30-க்கு வந்து சேருகிறார்.
அதைத் தொடர்ந்து மாலை 6.30-க்கு தங்கக் கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். வாகன மண்டபத்தை இரவு 8.30-க்கு அடைகிறார். பின்னர் 9.30-க்கு கண்ணாடி அறைக்கு சென்று சேருகிறார். முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.