திருச்சி, கரூர், பெரம்பலூர் தொகுதியில் திமுக போட்டியிடாதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ள திருச்சி மற்றும் கரூர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகள் அனைத்தும் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் கூட திமுக போட்டியிடவில்லை. ஆனால், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர் சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப்போகிறது. திருச்சி, கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அவர்களுடைய சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. இதனால் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்ட திமுகவினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திமுகவை புறந்தள்ளி கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியதில்லை என்பதுதான் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.