திருச்சி மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனர். பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டு போலீஸார் உதவியுடன் வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் காவல்துறையினர் மட்டுமல்லாது மத்திய போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் உதவியும் தேர்தல் ஆணையத்தால் கோரப்பட்டிருந்தது.
இதன்படி, இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள துணை ராணுவத்தினர் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத் நகரிலிருந்து வந்துள்ள இந்த துணை ராணுவ வீரர்கள் ரயில்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்துள்ளனர். திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 84 ராணுவ வீரர்கள் திருச்சிக்கு ரயிலில் சனிக்கிழமை வருகை தந்தனர். உதவி ஆணையர் ரமேஷ் சந்த் தலைமையில் வந்துள்ள இந்த வீரர்கள், திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள், பறக்கும்படை பிரிவு, ரோந்து குழு, வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்புக்கு நியமிக்கப்படவுள்ளனர்.