திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே இனாம்கல்பாளையம் ஊராட்சி வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் பாலசந்தர் (39). இவருக்கும் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்து கோதர்சன் (8), சிவகார்த்தி (7) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலைபார்த்து ஊர் திரும்பிய பாலசந்தர் தற்போது அப் பகுதியில் சம்சா கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணம் குறித்து கேட்டபோது, மனைவி சரியான கணக்கு காட்டவில்லையாம்.
இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர் தகராறில் ஈடுபட்டார். சனிக்கிழமை அதிகாலை தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாலசந்தர் அரிவாளால் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
மண்ணச்சநல்லூர் போலீஸார் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.