திருச்சி மாவட்டம், முசிறியில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை சார்பில் வணிகர்கள், உணவு விடுதிகள், அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான சிறப்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேசியது:
தேர்தல் விதிகள் தற்போது அமலில் உள்ளதை வணிகர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். நகைக் கடை, நிதி நிறுவன உரிமையாளர்களிடம் அரசியல் சார்ந்தவர்களோ, தனி நபரோ அளவுக்கு அதிகமாக தங்க நாணயம் வாங்கினாலும், அடகு வைத்துப் பணம் பெற்றாலும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் உணவகங்களில் அதிகளவில் டோக்கன் வழங்கி உணவு பறிமாற்றம், விடுதிகளில் தங்கி தவறான செயல்களில் ஈடுபடுவது மற்றும் பணப்பட்டுவாடா போன்றவை தெரியவந்தால் உடனே வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர்கள் சந்திரசேகரன் (தொட்டியம்), குருநாதன் (துறையூர்), வட்டாட்சியர்கள் சுப்பிரமணியன் (முசிறி), ரபிக்அகமது (தொட்டியம்), காவல் உதவி ஆய்வாள்கள் பானுமதி, செல்லப்பா மற்றும்
வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.