திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ: திருச்சியில் உள்ள பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மருந்தியல் கல்லூரி, மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் ஆகிய நிறுவனங்கள் 50 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச் சுவர், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்று கூறி நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரியாரால் உருவாக்கப்பட்டு, அவர் பெயரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தின் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலைத் துறை உடனடியாகக் கட்டித் தர வேண்டும்.
கி.வீரமணி: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது என்று திருச்சி உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. அதற்கு எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. தேவையென்றால் சர்வேயர் மூலம் நிலத்தை அளந்து கொள்ளலாம் என்று பதில் கடிதம் அனுப்பப்பட்டது. கடிதத் தொடர்பு இருந்து கொண்டிருக்கும்போதே கல்வி நிறுவன வளாகத்தின் சுவர் நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இதன்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.