திருச்சி அருகே போலி மதுபானங்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார். மேலும் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகிலுள்ள அசூர் பகுதியில் மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில், துவாக்குடி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலிஸார் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் அசூர் முள்காட்டுப் பகுதியில் மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதை கண்டறிந்த போலீஸார், அங்கு மது விற்றுக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ச. ராஜேந்திரனை (35), பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் விற்றது போலி மதுவகைகள் என்பதும், அரசு மதுபானங்களைப் போல பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜேந்திரனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.