திருச்சி பெரிய கடைவீதியில் ரூ. 24 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட கோட்டை துணை அஞ்சலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த துணை அஞ்சலகத்தில் கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யு, இயக்குநர் அ. தாமஸ் லூர்துராஜ் ஆகியோர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர்.
இங்கு பாரம்பரிய அஞ்சல் சேவைகள், அஞ்சலக சேமிப்பு வங்கி சேவைகள், அஞ்சலக காப்பீட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையமும் செயல்படுகின்றன.
பொதுமக்கள் இதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என துறைத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரசேகர், செயற்கை வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் வேனுகோபால், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலகண்ணன், முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் மற்றும் அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.