சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 17.17 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானம் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில், செல்வதற்கு வந்திருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை உதவி ஆணையர் எம். பண்டாரம் தலைமையிலான வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர் தனது உடைமைகளுக்குள் பத்தி பாக்கெட்டுகளை வைத்திருந்தார். அதன்மீது சந்தேகம் எழுந்ததால் சுங்கத்துறையினர் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, குமார் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பத்தி பாக்கெட்டுகளை சோதனை செய்ததில், அதற்குள் வெளிநாட்டு பணத்தாள்கள் (கரன்சிகள்) மறைத்து கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. அதில், அமெரிக்க டாலர் 13,800, யூரோ 9,300, சிங்கப்பூர் வெள்ளி 1,150 உள்பட இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் ரூ. 17.17 லட்சம் பணத்தாள்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.