தங்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி, திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை தண்டோரா போட்டு, தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணி நீக்கத்தால் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு விதிகளைத் தளர்த்தி பணி வழங்க வேண்டும்.
சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடாமல், அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர்கள் பி. சந்திரசேகரன் (தஞ்சை), பி. மகாலிங்கம் (திருவாரூர்), ஏ. கருப்பையா (புதுக்கோட்டை), துணைத் தலைவர் சக்திவேல் (திருச்சி) தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலச் செயலர் ஏ. பெரியசாமி போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஆ. அம்சராஜ், துணைத் லைவர் பி. கோதண்டபாணி, மாநிலச் செயலர் ச. மகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தண்டோரா போட்டு தொடர் முழக்கமிட்டனர்.