மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார் மத்திய மண்டல அஞ்சல்துறை இயக்குநர் ஏ. தாமஸ் லூர்துராஜ்.
விடுமுறை காலத்தையொட்டி, திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கோடை பெக்ஸ் -2019 என்ற அஞ்சல்தலைக் கண்காட்சியை புதன்கிழமை தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இக்கண்காட்சியில் மூத்த மற்றும் இளைய அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் சேகரித்த விலங்குகள், பறவைகள், சினிமா, சங்க இலக்கியங்களான மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், ராணுவ அஞ்சல் தலை என 400க்கும் மேற்பட்ட சிறு அஞ்சல்தலைகள் இடம்பெற்றுள்ளன.
இம்மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், புதன்கிழமை தோறும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை சேகரிப்பது குறித்தும், அதன் பயன் குறித்தும் பயிற்சிப் பட்டறை நடைபெறும்.
இப்பயிற்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் அரியவகை அஞ்சல் தலைகளை சேகரிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது, அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தை மாணவர் சமுதாயம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தாமஸ் லூர்துராஜ்.
இக் கண்காட்சியில், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், ரயில்வே முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், அஞ்சல்துறை பணிகள் உதவி இயக்குநர்கள் சிவப்பிரகாசம், கலைச்செல்வன், சாந்தலிஙகம், மைக்கேல்ராஜ், அஞ்சல் சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஷ், அஞ்சல்தலை சேகரிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.