துறையூர் அருகிலுள்ள கோட்டாத்தூர் வனப்பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை
உயிரிழந்தது.
துறையூர் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகள் அதிகமாக உள்ளன. இதில் கோட்டாத்தூர் வனக்காப்புக் காட்டில் அதிகமான எண்ணிக்கையில் மான்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீரைத் தேடி மான்கள் வெளியே சுற்றித் திரிகின்றன. இவ்வாறு வெளியே சுற்றும் மான்களை அங்கு சுற்றித்திரியும் வெறிநாய்கள் கடித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 4 மான்கள் உயிரிழந்துள்ளன.
இந்தநிலையில் நாய்கள் துரத்தி கடிப்பட்டு புள்ளிமான் உயிரிழந்து கிடப்பதாக, கோட்டாத்தூர் பகுதி மக்கள் எதுமலை வனக்காவலர் விசுவநாதனுக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விசுவநாதன் மற்றும் வனத்துறையினர் புள்ளிமான் சடலத்தை கைப்பற்றி, எதுமலை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து எதுமலை வனப்பகுதியில் புள்ளிமான் புதைக்கப்பட்டது.