கோடை பயிற்சி: மாணவர்களுக்கு விளையாட்டு ஆடைகள் அளிப்பு
By DIN | Published On : 15th May 2019 08:23 AM | Last Updated : 15th May 2019 08:23 AM | அ+அ அ- |

திருச்சியில் கோடை பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளுக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களின் சார்பில் செவ்வாய்க்கிழமை விளையாட்டு ஆடைகள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சிப் பிரிவு சார்பில், ஆண்டுதோறும் கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.
24 நாள்கள் நடைபெறும் நிகழாண்டுக்கான முகாம் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் என 316 பேர் பங்கேற்றுள்ளனர். தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, தேக்வாண்டோ உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாநகரக் காவல்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், திருச்சி ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து விளையாட்டு வீரர்களுக்கு கால்சட்டை, பனியன் உள்ளிட்டவற்றை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களின் சார்பில் விளையாட்டு வீரர்கள் அணியும் மேல்சட்டை யும் (டி-ஷர்ட்), ரோட்டரி சங்கங்கள் சார்பில் கால்சட்டை யும் (டிராக் சூட்) வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம்-போக்குவரத்து)
ஆ. மயில்வாகனன், திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் கே. பிரபு, ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் மந்திரி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும திருச்சி பதிப்பின் உதவிப் பொதுமேலாளர் ஜெ. விஜய் மற்றும் திருச்சி ரோட்டரி சங்கங்களின் 2018-19ஆம் ஆண்டுக்கான தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.