துறையூர் அருகே மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
துறையூர் வட்டம், திருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. மளிகைக்கடை உரிமையாளரான இவர், திங்கள்கிழமை காலை நெட்டவேலம்பட்டியிலுள்ள தனது மகள் கிராமக் கோயிலில் குடமுழுக்கில் பங்கேற்க குடும்பத்தினருடன் சென்றார்.
திங்கள்கிழமை இரவு கிருஷ்ணசாமி வீடு திரும்பிய போது, வீடு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்கதவு உடைக்கப்பட்டு, இரும்பு அலமாரியிலிருந்த தங்கச்சங்கிலி, வளையல், முத்திரை காசுகள், மோதிரம் உள்பட 25 பவுன் தங்க நகைகளையும், ரூ. 45 ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுபோல கிருஷ்ணசாமி வீட்டுக்கு அருகில் வசிக்கும் விசாலாட்சி வீட்டில் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதும், சுந்தரம் என்பவரது வீட்டில் திருட்டு முயற்சியும் நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.