முன்னாள் படை வீரர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்படவுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் விதவைகள் ஆகியோருக்கான அனைத்துச் சேவைகளும் பயன்பாடுகளும் கணினி மயமாக்கப்படவுள்ளது.இதற்காக சம்பந்தப்பட்டோரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இதுவரை 50% மட்டுமே கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யாதவர்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் 2019, ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவரங்களைப் பதிவு செய்யாதவர்களுக்கு நிதியுதவிகள், சான்றுகள்,பயன்பாடுகள் பெறுவதில் இடையூறுகள் ஏற்படும்.
எனவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள்,விதவையர்கள் தங்களது படைப்பணி விவரங்கள்,ஆதார் எண்,வங்கி கணக்கு விவரங்கள், இ-மெயில் ஆகியவற்றுடன், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, அதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஒரே குறுந்தகட்டில் (சி.டி)தனித்தனியாக பதிவு செய்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2410579 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.