திருச்சி மாநகராட்சி சார்பில் திருவரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும் சனிக்கிழமை (மே 18)) இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
திருவரங்கம் கோட்டத்துக்குள்பட்ட 5ஆவது வார்டு பகுதி மக்களுக்காக திருவானைக்கோவில், கிழக்கு ஐந்தாம் பிரகாரத்தில் பாரதியார் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முகாம் நடைபெறும். கோ. அபிஷேகபுரம் கோட்ட 55ஆவது வார்டு பகுதிக்கு குறத்தெரு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முகாம் நடைபெறும். அரியமங்கலம் கோட்டம் 27ஆவது வார்டுக்கு செந்தண்ணீர்புரம் மருந்தகம், பொன்மலை கோட்டம் 23ஆவது வார்டுக்கு கே.கே. நகர், பெரியார் மணியம்மை மெடிக்கல் மிஷன் வளாகத்திலும் மருத்துவ முகாம் நடைபெறும். மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் முகாமைத் தொடக்கி வைக்கவுள்ளார்.
குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரகம், ரத்த அழுத்தம், சர்க்கரை என பல்வேறு நிலைகளில் பரிசோதனைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். இலவச மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படும். காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறும். மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் தலைமையில், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், மகப்பேறு உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கவுள்ளனர்.