வையம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் காவலர் காயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யலூர் அருகே தீர்த்தகிழவனூரைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் கார்த்திக்ராஜ். இவர், திருச்சியில் உள்ள சிறப்பு காவல் படையில் காவலராக உள்ளார்.
இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மைத்துனர் கார்த்திக்குடன் இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு புறப்பட்டார். அப்போது, மறைந்த தனது தந்தையின் ஏர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
கல்லுப்பட்டி அருகே வந்த போது நிலைதடுமாறி இருசக்கரவாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியது. இதில், இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்த இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு சம்பவஇடத்துக்கு சென்று துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார். வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.