திருவானைக்காவில் இளைஞர் அடித்துக் கொலை
By DIN | Published On : 20th May 2019 08:59 AM | Last Updated : 20th May 2019 08:59 AM | அ+அ அ- |

திருவானைக்கா பிரதான சாலையிலுள்ள பிரியாணி கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருவானைக்கா பிரதான சாலையிலுள்ள பிரியாணி கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பிக்சாண்டார்கோயில் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அப்துல்லா (35), அவரது நண்பர் முஸ்தபா ஆகிய இருவரும் ஆட்டோவில் வந்தனர்.
அப்போது கடைவாசலில் அப்துல்லாவுக்கும், அடையாளம் தெரியாத இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் தாக்கப்பட்டதில் அப்துல்லா பலத்த காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, அப்துல்லாவை அவரது நண்பர் முஸ்தபா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அப்துல்லா கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிந்து, பிரியாணி கடை வாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளைக் கொண்டு, தகராறில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.