திருச்சி திருவெறும்பூரில் திங்கள்கிழமை ஆம்னி வேன் உரிமையாளர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவெறும்பூர் குலாம் தஸ்தகீர் மகன் அப்பாஸ் அலி(34). இவர், ஆம்னி வேன் சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது வேன் திங்கள்கிழமை அதிகாலை காட்டூர் மஞ்சத்திடல் பாலத்திலிருந்து பாப்பாக்குறிச்சி செல்லும் சாலையில் நிற்பதாக அவரது வீட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது வேனுக்குள் அப்பாஸ் அலி எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் சென்று சடலத்தை பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வேனுக்குள் இருந்த 5 லிட்டர் மண்ணெண்ணைக் கேனை போலீஸார் கைப்பற்றினர்.
அப்பாஸ் அலி எப்படி இறந்தார்? எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பாஸ் அலிக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.