திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
இக்கோயிலில் நிகழாண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா மே 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் உள்ளிட்டவை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோர் கருமண்டபம் சுங்கச்சாவடி அருகேயுள்ள கோரையாற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பொங்கலிட்டும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
தொடர்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், தீச்சட்டி ஏந்தியபடி ஏராளமான பெண்களும் ஆண்களும் இறங்கினர். செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி உலா நடைபெறவுள்ளது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.