துறையூர் பேருந்து நிலையம் முன்பு செல்லிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் போலீஸாரைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் செய்தனர்.
செல்லிப்பாளையத்தைச் சேர்ந்த நடராஜனும், அவருடைய தாயார் பெத்தாயியும் மே 24ம் தேதி பேருந்து நிறுத்துமிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது அருகிலிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்தனராம்.
இதனால் இவர்கள் இருவருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.
காயமடைந்த நடராஜனும், அவருடைய தாயாரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் துறையூர் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து திங்கள்கிழமை நடராஜன் சார்ந்த சமூகத்தினர் திடீர் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து சென்ற போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.