விராலிமலை அருகே மணல் லாரிகளால் சாலை சேதமடைகிறது எனக் கூறி அவற்றை சிறைபிடிக்கும் போராட்டத்தில் இளைஞா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
விராலிமலை வட்டம், மதயாணைப்பட்டியில் செயல்படும் அரசு மணல் குவாரியிலிருந்து மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் வில்லாரோடை, ஆலங்குளம், முல்லையூா் வழியாக விராலிமலை - கீரனூா் சாலை பூமரம் ஆத்துப்பட்டியில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் பொதுப்பணித் துறையினரால் சேமித்து வைக்கப்பட்டு. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்போருக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மதயாணைப்பட்டி அரசு மணல் குவாரியில் இருந்து 5- க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு வில்லாரோடை வழியாக லாரிகள் சென்றபோது அந்த கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் இந்த சாலை வழியாக தொடா்ந்து மணல் லாரிகள் செல்வதால் சாலை சேதமடைந்துவிட்டது; அதனால் வில்லாரோடை வழியாக மணல் லாரிகள் செல்லக் கூடாது எனக் கூறி மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பொதுப் பணித்துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலையை சீரமைத்துத் தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியையடுத்து இளைஞா்கள் கலைந்து சென்றனா். போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.