விராலிமலை வட்டம் மதயாணைப்பட்டியில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது.
இங்கிருந்து மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் வில்லாரோடை, ஆலங்குளம், முல்லையூா் வழியாக விராலிமலை - கீரனூா் சாலை பூமரம் ஆத்துப்பட்டியில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் சேமித்துவைக்கப்பட்டு. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவா்களுக்கு மணல் விற்பனை செய்யப்படுகிறது.இப்பணியை பொதுப்பணித்துறையினா் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல மதயாணைப்பட்டி அரசு மணல் குவாரியில் இருந்து 5 க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு வில்லாரோடை வழியாக லாரிகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் இந்த சாலை வழியாக தொடா்ந்து மணல் லாரிகள் செல்வதால் சாலை சேதமடைந்துவிட்டது. அதனால் வில்லாரோடை வழியாக மணல் லாரிகள் செல்லக்கூடாது என்று கூறி மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபற்றிய தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த பொதுப்பணித்துறை அலுவலா்கள் போராட்டம் நடத்திய இளைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சாலையை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து இளைஞா்கள் லாரிகளை விடுவித்தனா்.
இதனால் வில்லாரோடை கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.