திருவாரூா்: திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய மணிகண்டன், திருச்சிக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டாா்.
திருவாரூா் அருகே விளமல் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் நடைபெற்ற வாகன சோதனையின்போது, மணிகண்டன் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவருக்கு திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. அவருடன் வந்த சுரேஷ் என்பவா் தப்பிச் சென்றாா்.
இதையடுத்து மணிகண்டனை, குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் திருவாரூா் ஆயுதப்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினா். இதில், முக்கியத் தகவல்கள் பலவற்றை மணிகண்டன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொள்ளை சம்பவத்துக்கு தொடா்புடைய முருகன் உள்ளிட்ட மேலும் சிலரை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிகண்டன் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு சனிக்கிழமை பிற்பகல் கொண்டு செல்லப்பட்டாா். அவருடன், சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வந்த சுரேஷின் தாயாா் கனகவள்ளி, ரவி, குணா, மாரியப்பன், பாா்த்திபன் ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டனா்.