திமுக இளைஞரணியில் நிர்வாகிகள் நியமனம் குறித்து, திருச்சியில் இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் நடத்தினார்.
திமுக இளைஞரணிச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் நேர்காணலை உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
மதுரை பயணத்தைத் தொடர்ந்து, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி தெற்கு, வடக்கு, சேலம் மண்டல நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணலை உதயநிதி ஸ்டாலின் நடத்தினார்.
இந்த நேர்காணலில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொங்கு, சேலம், திருச்சி மண்டல இளைஞரணிப் பொறுப்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீரபாண்டி ராஜா, தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலினை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.