திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான வளைகோல்பந்து போட்டியில், ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளுக்கிடையிலான வளைகோல்பந்து போட்டிகள் ( மாணவர் பிரிவு) திருச்சி அண்ணா விளையாட்டரங்க செயற்கை புல்வெளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
இதன் இறுதிப் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியை 4-1 என்ற கோல்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை ஜமால் முகமதுகல்லூரி கைப்பற்றியது. இக்கல்லூரியின் மதன் 4 கோல்களை அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியை 4-0 என்ற கோல்கணக்கில் வென்று திருச்சி தூய வளனார் கல்லூரி மூன்றாமிடத்தைப் பிடித்தது.
சாம்பியன்பட்டம் பெற்ற ஜமால் முகமது கல்லூரிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுப் பிரிவுச் செயலர் ஏ.பழனிச்சாமி வழங்கினார். இதுபோல மற்றஇடங்களைப்பிடித்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் ஷாஇன்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.