திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள வி.துறையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 8-ஆம் தேதி திருக்காவிரியில் இருந்து திருமஞ்சன தீர்த்தக்குடம் எடுத்து வருதலும், 9 ஆம் தேதி காலை 7 மணிக்கு கணபதி பூஜை, தனலட்சுமி பூஜை, கணபதி ஹோமமும், மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜையும், 10 ஆம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், திரவிய ஹோமமும், 11 ஆம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடும், 10 மணிக்கு அருள்மிகு மதுர காளியம்மன் கோபுரக் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் , பரிவாரசாமி கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர. சுதர்சன், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் கோயில் செயல் அலுவலர் பெ. ஜெய்கிஷண் மற்றும் சமயபுரம், வி. துறையூர், சிறுமருதூர், பள்ளிவிடை, வாளாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.