கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே சாலையோரத்தில் மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவோரின் வாகனங்கள் வாகனத் தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் துறையினரால் கொள்ளிடம் காவல் நிலைய சோதனைச் சாவடி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. லாரிகள், கார்கள் என சுமார் 50 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் இப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் நான்கு ரோடு பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் மணல் திருட்டு வாகனங்களால் பேருந்துகள் திருப்ப முடியாத சூழ்நிலை உள்ளது.
மேலும், இந்த இருவழி சாலையில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் தற்போது ஒருவழி சாலையாகவே செயல்பட்டு வருகிறது. இதுதவிர மாதக்கணக்கில் மணல் திருட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் இந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்றார் சமூக ஆர்வலர் முரளி.