திருச்சி மாவட்டத்தில் ரூ. 6 கோடியில் தலா 20 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள், 20 அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள், பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய அம்மா பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை, தலா ரூ.20 லட்சம் மதிப்பில் 20 அம்மா பூங்காக்களும், தலா ரூ.10 லட்சம் மதிப்பில் 20 அம்மா உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் ரூ.6 கோடியில் இந்த பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோப்பு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, நாச்சிகுறிச்சி, கள்ளிக்குடி, கிருஷ்ணசமுத்திரம், நவல்பட்டி, பண்ணப்பட்டி, செட்டியப்பட்டி, மணியங்குறிச்சி, கல்லகம்பட்டி, நல்லாம்பிள்ளை, இனாம்சமயபுரம், கொணலை, டி. புதூர், திருத்தியமலை, எம். களத்தூர், நாகையநல்லூர், சேருகடி, ஆங்கியம் ஆகிய 11 ஊராட்சிகளில் இதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடத்தில் 19 வகையான உபகரணங்கள் உள்ளன. இந்தப் பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களது ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்றார் ஆட்சியர்.