கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து, விழியிழந்தோர் மறுவாழ்வு மைய ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 4 மாதமாக ஊதியம் தராததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மறுவாழ்வு மைய மேலாளரைச் சந்தித்து மனு அளித்தனர். ஆனால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து உபயோகிப்பாளர் உரிமை இயக்க மாநில பொதுச்செயலர் மகேஸ்வரி தலைமையில் திரளான மாற்றுதிறனாளிகள் கன்டோன்மெண்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்த போலீஸார் அவர்களது மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.