குழந்தைகளுக்கு ஊட்டசத்து மிக்க உணவுகளை கொடுத்து வளர்த்தால்தான் அவர்களின் எதிர்காலம் நோயின்றி அமையும் என்றார் மருத்துவர் கு. சிவராமன்.
திருச்சி எஸ். ஆர். வி. பப்ளிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பெற்றோரியல் நிகழ்ச்சியில் மருத்துவர் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு கலாசாரம் குறித்து மேலும் பேசியது: ஆரோக்கியமான உணவு பழக்கம் வேண்டும் என்ற மனநிலை இளம் தாய்மார்களிடையே ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான உத்வேகம் எனலாம். உணவு விஷயத்தில் சரியானதை சாப்பிடவும், பாதுகாப்பானதை சாப்பிடவும்,தேவையான உணவை தேவையான நேரத்தில் சாப்பிடவும் என்ற மூன்று குறிப்புகள் தான் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை. நடைப்பயிற்சி என்பது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க மிகவும் அவசியம்.
விளம்பரங்கள், பிரம்மாண்டங்கள் பொய்யான தகவல்களை நமக்கு தருகின்றன. விளம்பர சந்தையின் தாக்கத்தால் நாம் கண்டதையும் சாப்பிட்டுவிடக் கூடாது. நம் உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சரியான உணவு இல்லாததால் பல நோய்கள் வருகின்றன. பல நோயாளிகள் உளவியல் ரீதியாகவும் பிரச்னைக்குள்ளானவர்களாகவும் மாறுகிறார்கள்.
வெளிநாட்டில் உள்ள உணவு கலாசாரம் நம் நாட்டு சூழலுக்கு ஏற்றதாக இருக்காது. நம் நாட்டில் விளையும் பொருள்களைதான் நாம் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு சரியான ஊட்டசத்து மிக்க உணவுகளை கொடுத்து வளர்த்தால்தான் அவர்கள் எதிர்காலம் நோயில்லாமல் இருக்கும் என்றார்.
நிகழ்வில், பள்ளியின் தலைவர் எ. ராமசாமி, செயலர் பி.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.செல்வராஜன், துணைத்தலைவர் எம். குமரவேல், இணைச்செயலர் பி.சத்யமூர்த்தி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.