திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் திட்டத்துக்கான இடத்தை பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே. ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் காவிரிஆற்றின் குறுக்கே கதவணை கட்ட உத்தரவிட்டதன்பேரில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமம் மற்றும் நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் ஒருவந்தூர் கிராமங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே நெடுகை 122.24 கி.மீ - ல் கதவணை அமைக்கும் திட்டத்துக்கான இடத்தையும், கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குளித்தலை கிராமம் மற்றும் திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், முசிறி கிராமங்களுக்கு இடையே காவிரியின் குறுக்கே நெடுகை 161.54 கி.மீ- ல் கதவணை அமைக்கும் திட்டத்திற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.
மேலும் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூரில் உள்ள கதவணையையும் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர். பின்னர் மாலை திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பழைய கதவணையை ரூ. 38.85 கோடியில் பலப்படுத்தும் பணியையும், ரூ. 387.60 கோடியில் கொள்ளிடம் ஆற்றில் சேதமடைந்த கொள்ளிடம் அணைக்குப் பதிலாக புதிய கதவணை அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார பொறியாளர் ஏ. தனபால், திட்ட உருவாக்க தலைமைப் பொறியாளர் ஜி. பொன்ராஜ், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் ஆர். பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுப் பணியின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம், வாழ்க்கை, அரியலூர் மாவட்டம், தூத்தூர் ஆகிய பகுதியில் உள்ள ஆறுகளை பார்வையிட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.