திருச்சி: தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சியில் சுமார் 1 லட்சம் பனைமரங்களை உருவாக்கும் வகையில் பனை விதைகள் விதைக்கும் பணிகளை மாநகர காவல் துணை ஆணையர் அ. மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.
தமிழகமெங்கும் நடைபெறும், சுமார் ஒரு கோடி பனை விதைப்பு உலக சாதனை நிகழ்வின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் பல்வேறு பகுதிகளில் விதைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கே.சாத்தனூர் பகுதி கணக்கன்குளம் ஏரியில் 5000 பனை விதைகள் விதைப்பு பணி, தண்ணீர் அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் மயில்வாகனன், விதைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். தண்ணீர் அமைப்பு இணைச் செயலாளர் கி.சதீஷ் குமார் ஒருங்கிணைத்தார்.
அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவியர்கள் 150 பேர், பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள், கலைக்காவிரி கல்லூரி மாணவர்கள், எடமலைப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தண்ணீர் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர். கே. ராஜா, பாலா பாரதி, இரா.பவப்பிரியா, மக்கள் சக்தி இயக்க தரணி, அசோக் ரத்தினவேல், பழனிசாமி, கௌஸ் பேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.