துறையூர்: துறையூர் பெரிய ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் மேற்கு கரை பலமில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
துறையூர் பெரிய ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவு உடையது. பச்சமலையில் பெய்கிற மழையால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வறட்சியால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிற நகர மக்களுக்கு பெரிய ஏரி நிரம்புவதைக் கண்டு மகிழ்ச்சி அடைய முடியவில்லை. மேற்கு கரையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக கரை பலமிழந்திருப்பதால், பெரிய ஏரி நீர் கரையை அரித்துக் கொண்டு வெளியேறிவிடுமோ என்று மக்களிடமும், ஏரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்கு கரை சேதமடைந்தால் அந்த கரையை குறுக்கு வழியாக பயன்படுத்தி துறையூருக்கு வந்து செல்கிற கோவிந்தபுரம், கிருஷ்ணபுரம் கிராம மக்களின் போக்குவரத்தும் தடைப்படும். அரசு துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக பெரிய ஏரிக்கரையை சீரமைத்து, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.