திருச்சி விமான நிலையத்தில், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 22.06 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை திருச்சி வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னை நாகூர் மீரான்(35), முகமது அலீப்(24) ஆகிய இருவர் மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் மேற்கொண்ட சோதனையில், உள்ளாடையில் ரூ.22.06 லட்சம் மதிப்புடைய 586 கிராம் தங்கச்சங்கிலிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதில் நாகூர் மீரானிடம் 336 கிராமும், முகமது அலீப்பிடமிருந்து 250 கிராம் தங்கமுமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு தங்க நகைகளைக் கடத்தி வருவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நாகூர் மீரான், முகமது அலீப்பிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.