ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், திருச்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் போஷான் அபியான் திட்டத்தின் மூலம், செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளிடத்தில் குள்ளத்தன்மை, மெலிதன் தன்மை, கடுமையான எடை குறைவைத் தடுத்தல், எடைகுறைவான குழந்தைகள் பிறப்பைத் தடுத்தல், குழந்தைகள் மற்றும் பெண்களிடையே ரத்தசோகையை தடுத்தல் என்ற அடிப்படையில் விழிப்புணர்வு பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நடை ஓட்டத்தை, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. சிவராசு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த ஓட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெஸ்ட்ரி பள்ளியில் பேரணி நிறைவடைந்தது.
முடிவில் ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் 5 இடத்தைப் பிடித்தோருக்கு கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்டத் திட்ட அலுவலர் புவனேசுவரி, மகளிர் திட்ட இணை இயக்குநர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.