காப்பீட்டுத் திட்டத்தில் 1.03 லட்சம் பேருக்கு ரூ.211 கோடியில் சிகிச்சை

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்,  திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1.03 லட்சம் பேருக்கு ரூ.211 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்,  திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1.03 லட்சம் பேருக்கு ரூ.211 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு.
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் ஓராண்டு விழாவையொட்டி, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்து, மேலும் அவர் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 5.68 லட்சம் குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களுக்குத் தனித்தனியே  காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,  காப்பீட்டுத் திட்ட அட்டை வேண்டி 16,627 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான அடையாள அட்டையை திருச்சி மாவட்டத்தில் அச்சிட்டு வழங்குவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை, காப்பீட்டுத் திட்டம் மூலமாக 1.03 லட்சம் பேருக்கு ரூ.211.57 கோடி மதிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், 6,494 பேர் இதய அறுவைச் சிகிச்சை செய்து தங்களது ஆயுளை நீடித்துள்ளனர்.
 மேலும் 12,233 புற்றுநோய் அறுவைச் சிகிச்சை, 10,878 சிறுநீரக அறுவைச் சிகிச்சை, 7,874 பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, மணப்பாறை,  ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, துறையூரிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள், தொட்டியம், துவரங்குறிச்சி, ஓமாந்தூர், துவாக்குடி, மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை மற்றும் 48 தனியார் மருத்துவமனைகள் அங்கிகரீக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை உள்ள அனைவரும் இந்த மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வெஸ்ட்ரி பள்ளியில் நிறைவடைந்தது. இப் பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பழனிதேவி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சி. கோபிநாத், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆசியா பேகம் மற்றும் காப்பீட்டுத் திட்ட அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com